நம்பி்க்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி எப்படியும் வென்று விடும் என்ற நம்பி்க்கையுடன் தான் பிரதமர் மன்மோகன் சிங் ஜூலை 21ம் தேதி பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு எம்பி ஓட்டும் இதுவரை இல்லாத மதிப்பு பெற யார் எந்த பக்கம் உள்ளார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில் புதுடெல்லியே கலங்கிய ஒரு குட்டையாகி நிற்க அதில் மீன்பிடிக்க எல்லா அரசியல்வாதிகளும் வலையுடன் நின்றார்கள்.
இந்த நான்கு ஆண்டுகாலத்தில் நம்மைத்தவிர வேறு யாருக்கு தான் பயனாக இருந்தோம் என்ற எண்ணத்தில் இருந்த எம்பிக்களுக்கு கடைசியில் தங்களுக்கும் கடைசி காலத்தில் இப்படி ஒரு மரியாதை கிடைக்கும் என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. பங்குச்சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும் தங்களின் மதிப்பு கூடித்தான் உள்ளது என்று ஒவ்வொரு எம்பியும் நினைக்கும் அளவிற்கு அவர்களின் கிராக்கி கூடிவிட்டது.
பணவீக்கத்தை காட்டி அடுத்த ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு அணுஆயுத ஒப்பந்த விசயத்தில் என்ன நிலை எடுக்க என்று தொடக்கத்திலிருந்தே குழப்பம் தான். இதை எதிர்ப்பது தனது வாக்கு வங்கிகளை பாதிக்கலாம் என்ற பயத்தில் இருந்த அக்கட்சிக்கு மாயாவதி இதில் உட்புகுந்தது அடுத்து என்ன செய்ய என்ற குழப்ப நிலைக்கு தள்ளி விட்டது.
காங்கிரசா அல்லது பாரதிய ஜனதாவா என்ற நிலை மாறி காங்கிரஸா அல்லது மாயாவாதியா என்ற தலைகீழாகி தாங்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்ற நிலைமை தாமரை கட்சிக்கு ஏற்பட்டது எதிர்பாராத ஒன்று தான். மாயாவதி பிரதமர் ஆக ஆதரவு தர மாட்டோம் என்றும் மாயாவதி விஸ்வருவத்தால் காங்கிரஸ் தான் பாதிக்கப்படும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் அறிக்கை இடுவது இந்த பயத்தின் அடிப்படையில் தான்.
தேவகெளடாவும் அஜித்சிங்கும் காங்கிரசுக்கு எதிரணியில் சேர்ந்தாலும் மத்திய அரசு வாக்கெடுப்பில் தப்பிப்பதற்கு போதுமான எண்ணிக்கையை பெற்று விட்டது என்பதே பெரும்பான்மையோரின் எண்ணம். பிரதமர் உரை அந்த தன்னம்பிக்கையை வெளிக்காட்டு்றது என்றால் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்திலேயே தங்களுக்கு 276 எம்பி்க்கள் ஆதரவு உள்ளதாக சொன்னபோது எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் முகத்தில் ஆச்சரியம் ஒன்றும் எழவில்லை. இதில் கடுமையான கொடுமை காங்கிரசுக்கு பாஜக மற்றும் சிவசேனா அதிருப்தியாளர்களின் ஓட்டுக்கள் தான். எப்படியோ மன்மோகன் தலை தப்புகிறது என்பது தான் இன்றயை நிலைமை
Monday, July 21, 2008
[+/-] |
மன்மோகன்சிங் தலை தப்புகிறது |
Friday, July 18, 2008
[+/-] |
பிரதமர் பதவி ஆசையில்... |
கனவு காண்பது எல்லோரின் உரிமை. அதுவும் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று யாரும் கனவு காணலாம். சொந்தமான வீடு, சொகுசான கார், சண்டைபோடாத மனைவி என்று கனவுகளை காணும் சராசரி மனிதர்களுக்கு இத்துடன் இந்த நாட்டின் பிரதமராகவும் ஆக வேண்டும் என்ற கனவும் இருக்கலாம். அந்த கனவு மற்ற கனவுகளுடன் கல்லறைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் அரசியல்வாதிகள் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படும் போது அது வெளியே பேசப்படுகிறது.
அரசியல்வாதிகளின் கனவுகளைப்பொறுத்தவரையில் இந்த கனவு வட்டம், மாவட்டத்திலிருந்து தொடங்கி விடலாம். பிரதமராகி விட வேண்டும் என்று ஆசைப்படும் முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் கருணாநிதி்க்கு அந்த ஆசை கட்டாயம் இருக்காது. அதற்கு இந்தி பேசச்சொல்லுவார்களோ என்ற காரணம் மட்டுமல்ல. ஆனால் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிதாவிற்கு நிச்சயம் அந்த ஆசை இருக்க வேண்டும்.
சரி நம்ம ஊர்க்காரர்கள் ஆசையை ஒருபுறம் வைத்து விடுங்கள். மகாராஸ்ட்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சரத்பவாருக்கு இந்த ஆசை பெரியதாக இருந்தது என்று சொல்லுவார்கள். அதை கிட்டத்தட்ட எட்டிய அவருக்கு கடைசியில் கிடைக்காமல் போனது. இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் நம்புவது போல் தான் தெரிகிறது. சரத்பவார் பிரதமராக கட்டாயம் ஆதரவு தருவோம் என்று சிவசேனா கூட சொன்னது, ஆனால் ஆதரவு கேட்கும் சந்தர்பம் தான் பவாருக்கு இன்னும் வரவில்லை.
அப்படியே இன்னும் கொஞ்சம் வடக்கே போனால் உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் எல்லோருக்குமே இந்த பிரதமர் கனவு ஆசை உள்ளது. உபியில் வெற்றி அரசியல் நடத்திய தனக்கு புதுடெல்லி நாற்காலி கட்டாயம் கிடைக்கும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் நம்பினார், இன்னமும் நம்புகிறார். நீங்கள் வேண்டுமானால் அந்த பதவியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஏதோ தங்களிடம் உள்ள மசால்தோசையை கொடுப்பது போல கெடுபட்டினி அரசியல் கட்சிகள் அவருக்கு அவ்வப்போது ஆசை காட்டியபோது முலாயம்சிங்கிற்கு இந்த ஆசை கிட்டத்தட்ட நிறைவேறியது போன்ற நம்பிக்கையே உண்டாக்கியது.
இந்தியாவில் இப்போது இந்த ஆசை அதிகம் பிடித்து அலைபவர் உத்திரபிரதேச முதலமைச்சர் மாயாவதி தான். பிற மாநிலங்களிலும் 2 சதவிகிதம் ஓட்டு பெற்று வருவதால் தன்னை காங்கிரசுக்கு மாற்றாகவே நினைத்து விட்டார். இப்போது அவரின் இந்த கனவுக்கு புதிதாக கிடைத்துள்ள ஆதரவு கம்யூனிட் கட்சிகள். போதாக்குறைக்கு சந்திரபாபு நாயுடுவும் மாயாவதி பிரதமராக தனது ஆதரவை தெரிவித்து தனது பெரிய மனதை இன்னும் பெரிதாக்கி விட்டார்.
அடுத்த பிரதமர் யார் என்று சோனியாவுக்கும், அத்வானிக்கும் கட்டாயம் தெரியாது. ஆனால் அந்த பதவிக்கு தாங்கள் வரமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அடுத்த பிரதமரை உருவாக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கலாம். அப்படியானால் அடுத்த பிரதமர் யார்?
கனவு காணும் உரிமை எல்லோக்கும் உள்ளது. தான் ஒருநாள் பிரதமராவோம் என்று தேவகெளடா கனவு கூட கண்டிருக்க மாட்டாரே.?
Thursday, July 17, 2008
[+/-] |
மீனவர்களுக்காக திமுகவும் பாமகவும் வரிந்து கட்டுமா? |
தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் தானா என்று சந்கேதப்படும் அளவிற்கு அவர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இந்த அரசாங்கம் கைகட்டி வாய்பொத்தி நின்று கொண்டிருப்பது ஒரு அரசாங்கம் தன் ஆதிகுடிகள் மீது இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்ள முடியுமா என்ற வேதனையை உண்டாக்கி உள்ளது.
கிட்டத்தட்ட போர்ப்பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் சூழ்நிலையை போன்று தான் இன்றைக்கு தென்மாவட்டங்களின் மீனவர்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் பாரம்பரிய தொழிலை தங்களின் புண்ணிய பூமியில் செய்வது இந்த மக்களுக்கு இன்றைக்கு இயலாத காரியமாக மாறிவிட்டது. காலையில் கடலுக்கு செல்லும் தன் கணவன் மாலையில் சிங்கள் பேய்நாய்களின் தாக்குதல்களிலிருந்து தப்பித்து வருவானா என்று ஒவ்வொரு மீனவ பெண்ணும் கவலைப்படும் அளவிற்கு நிலைமை பாதாளத்தில் போய் நிற்கிறது.
பக்கத்தில் இருக்கும் இலங்கை தனி நாடாக இருக்கலாம். ஆனால் மறுகரையான மன்னாரில் உள்ள மீனவர்கள் அனைவரும் இக்கரை மக்களின் சொந்தக்காரர்கள். ஆனால் ஈழப்போர் இன்றைக்கு இந்த இரண்டு கடற்கரையோர மக்களையுமே தங்கள் தொழிலை செய்ய முடியாமல் ஆக்கி விட்டது.
விடுதலைப்புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் சிங்கள ராணுவம் நம் மீனவர்களை தொழில் செய்ய முடியாது என்ற பயங்கரத்திற்கு கொண்டு போய் விட்டுள்ளது. வெளிநாட்டு கொள்கை என்ற பெயரில் மத்திய அரசாங்கள் பக்கத்து நாட்டு அரசாங்கத்தின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல் நிற்கிறது என்றால் இதற்கு ஒரு சாத்வீக தீ்ர்வு காண மாநில அரசாங்கம் விரும்பாமல் உள்ளது ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் தருகிறது.
ஒரு மீனவனின் உயிர் இந்த அளவிற்கு மலிவாக போய்டவிட்டதா?. இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான ஏழை மீனவனுக்கு நஷ்டஈடு கொடுக்க வரும் அரசியல்வாதி்க்கு நன்றி போஸ்டர்களை இராமேஸ்வரம் சுவர்களில் பார்க்கும் போது இந்த மக்களை ஏமாற்றுவது இந்த அளவிற்கு எளிதா என்று தோன்றுகிறது.
நிலைமை மோசமாதை கண்டு தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் ஒரே நேரத்தில் போராட்டத்தை அறிவித்துள்ளது இந்த சோகத்தில் இவர்கள் செய்ய நினைக்கும் காமடியைத்தான் காட்டுகிறது. மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தர தன் தந்தையின் பெயரை லக்னோ விமானநிலையத்திற்கு வைக்க வேண்டும் என்ற அஜித்சிங்கின் கோரிக்கையை மத்திய அரசு ஒரே இரவில் நிறைவேற்றி உள்ளது. திமுகவிற்கு மீனவர் நலனில் அக்கறை என்றால் இலங்கை ராணுவத்திற்கு தரும் ஆதரவை இந்தியா விலக்கிக்கொள்ளா விட்டால் ஆதரவு வாபஸ் என்று அறிவிக்கட்டுமே. திமுக இதைக்கட்டாயம் செய்யாது என்று தெரியும், ஆனால் பட்டாளி மக்கள் கட்சி இதைச்செய்யலாமே?
Monday, July 14, 2008
[+/-] |
மன்மோகன் சிங்கிற்கு ஒரு சலாம் |
கடைசியாக அவர் சொன்னதை நிறைவேற்றப்போகிறார். சோனியாகாந்தியால் விசுவாசம் என்ற ஒரு அடிப்படை தகுதியை மட்டும் வைத்து இந்த நாட்டின் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிலரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை நிறைவேற்றியே காட்டுவேன் என்று அடம்பிடித்து மன்மோகன் சிங் இந்திய வரலாற்றில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
வலிமையற்ற பிரதமர் என்றும் காந்தி குடும்பத்தின் வெறும் கைப்பாவை என்றும் வர்ணிக்கப்பட்ட நம் பிரதமர் தனக்கும் தனித்தன்மை உண்டு என்ற செய்தியை தன் எதிரிகளுக்கு தெளிவாக இந்த விவகாரத்தில் வெளிக்காட்டிவிட்டார். எனவே தான் காங்கிரசுடன் தோழமையை முறித்துக்கொள்ள விரும்பாத கம்யூனிட் கட்சிகள் தாங்கள் மன்மோகன் சிங்கை மன்னிக்கப்போவதில்லை என்று அறிக்கை விடத்தொடங்கியுள்ளன.
அணுஒப்பந்தம் நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் அமெரிக்காவுடன் ஏதோ தனி வியாபாரமே செய்து கொண்டது போல சிலர் குற்றம் சாட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை . அமெரிக்கா என்றாலே வேப்பங்காய் போலும் உலகில் நடக்கும் எல்லா அக்கிரமங்களுக்கும் அந்த ஓரு நாடு தான் காரணம் என்பது போன்றும் இந்த அறிவுஜீவிகள் பேசுவது கிட்டத்தட்ட ஒரு வகை மனவியாதி தான்.
கூடன்குளம் அணுமின்நிலையம் விசயத்தில் கொடிபிடிக்காத கம்யூனிட் கட்சிகள் இப்போது அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை மட்டும் எதிர்ப்பற்கு காரணம் என்ன?. அமெரிக்கா என்றாலேயே தீண்டத்தகாத நாடு என்றால் இன்றைக்கு அந்த நாட்டுடன் இந்தியாவை விட அதிக உறவு வைத்துள்ளது கம்யூனிஷ நாடான சீனா தானே. ரஷியா கூட இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்தால் மட்டுமே வாக்கு அரசியல் நடத்த முடியும் என்ற கட்டாயத்தில் உள்ள கம்யூனிட்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பது வெறும் உள்ளூர் அரசியல் மட்டும் தானே?
காங்கிரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஓட்டுபோடும்போது அது பாரதிய ஜனதா கட்சியுடன் சேருவதை சகபயணி உறவு என்று அக்கட்சியின் தலைவர்கள் சொன்னாலும் இந்த புதிய கூட்டை கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரே விரும்பவில்லை என்பதையும் அக்கட்சியில் எதிர்ப்பு குரல் ஒலிக்கத்தொடங்கி விட்டது என்பதையும யாரும மறுக்க முடியாதே.
கம்யூனிஸ்ட்களுடன் உறவை முறித்ததில் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி தொடர்பு கிடைத்துள்ளது. இது கட்டாயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு பலத்தை தான் கூட்டப்போகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாயாவதி கட்சி பக்கம் இப்போது சென்றுள்ளது. கூட்டணியை மாற்றுவதில் அவர் நம்ம ஊர் ஜெயலலிதாவை விட மோசம். இந்த சூழ்நிலையில் தங்களின் புதிய அணுகுமுறையால் கம்யூனிஸ்ட்கள் மற்றுமொரு தவறை செய்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பணவீக்கம் பிரச்சனையில் சிக்கித்தவித்துள்ள மத்திய அரசு இந்த அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் பிழைப்பாரா என்பது ஜூலை 22ம் தேதி அன்று தான் தெரியும். ஆனால் இதல் வென்றாலும் தோற்றாலும் காங்கிரஸ் முன்பை விட வலியைமாக உலா வரும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு இப்போதே நன்றாக தெரியும்.
எனவே மன்மோகன் சிறந்த நிதிஅமைச்சர் மற்றுமட்டுமல்ல எதிர்நோக்கு பார்வை கொண்ட பிரதமரும் கூட என்று பெயர் எடுக்க இந்த ஆயுஆயுத கொள்கை ஒரு வரப்பிரசாதமான வாய்ப்பாகி விட்டது.
Friday, July 11, 2008
[+/-] |
குடிமகன் |
குடிமகன்
ஞாயிற்றுக்கிழமையானால் கோவிலில் இரண்டாவது பூசை முடிந்ததும் குடிமகன் பீரிஸ் எங்கள் வீட்டிற்கு தவறாமல் வந்துவிடுவார். என் அப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எப்படி முடிவெட்டிக்கொள்ளுகிறார் என்று எனக்கு பெரிய சந்தேகம் உண்டு. இப்படி வாரம் ஒருமுறை முடிவெட்டிக்கொள்ளுவதால் அவர் போலீஸ் ஆபிஸர் மாதிரி இருந்தாலும் குடிமகன் பீரிஸ் இப்படி வாராவாரம் வீடு வந்து போவதில் வேறு ஒரு காரணமும் இருந்தது.
அது முடிவெட்டிக்கொண்டிருக்கும் போது காதில் ஊர்க்கதைகளை ஊதுவது தான். ஐயா உங்களுக்குத் தெரியுமாய்யா, போன வராம் ஊர்கூட்டத்தில் இன்னார் மகன் இன்னாரை சிலுவை பிடிக்கச்சொல்லி தண்டைன கொடுத்தாங்க ( எங்கள் ஊர்களில் பெரிய குற்றம் செய்பவர்களை சிலுவை கையில் பிடித்துக்கொண்டு ஊர் சுற்றி வரச்செய்வது ஒரு வழக்கம்) என்று தொடங்கி சாமியாருக்கு எதிராக நடுத்தெருவில் நடக்கும் சதி வரை ஊர் நடப்புகளை விலாவாரியாக சொல்லுவார்.
பீரிஸ்பிள்ளை இப்படி போட்டுக்கொடுப்பதில் எனக்கும் வினை வருவது உண்டு. நம்ம பையனை இன்னார் மகன் இன்னாருடன் விளையாடும் இடத்தில் வைத்து பார்த்தேனே. அந்த பையன் சரியில்லை. நம்ம பிள்ளை அவன்கூட எல்லாம் பழகக்கூடாது என்று சொல்லி அவ்வப்போது வேட்டும் வைப்பார்.
முதலில் எனக்கு பீரிஸ்பிள்ளையை அறவே பிடிக்காது. அப்பாவிற்கு வாரம் ஒருமுறை முடிவெட்டுபவர் எனக்கு மாதம் ஒருமுறையேனும் தலையை பதம் பார்த்து விட வேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பது தான் எனக்கு அவரை பிடிக்காததற்கு முதல் காரணம். கமல் மாதிரி கப் முடி வைக்க ஆசைப்பட்ட எனக்கு குடிமகன் பீரிஸ் ஒரு பெரிய வில்லன் தான்.
என்கூட படிக்கும் பையன்கள் எல்லாம் பக்கத்து டவுனில் போய் முடிவெட்டிக்கொண்டிருந்த போது நான் மட்டும் பீரிஸ்பிள்ளையிடம் முடிவெட்டுவது எனக்கு கடுப்பாகவே இருக்கும். ஆனால் பீரிஸ்பிள்ளை இருக்கும் வரை அவர் தான் எனக்கு முடிவெட்ட வேண்டும் என்பதில் என் அப்பா மிகவும் கண்டிப்பாக இருந்தார்.
எங்கள் வீடு மாதா கோவிலுக்கு பக்கத்தில் இருந்தது. யாரும் இறந்துபோனால் இறுதி சடங்கு அடக்க பூசைக்கு பாதிரியாருக்கு உதவி செய்ய ஆல்டர் பாய்ஸ்( கோவில் பீடத்தில் பாதிரியாருக்கு உதவியாக நிற்கும் சிறுவர்கள்) பணிக்கு எந்த பையனும் வரமாட்டான். சாவுக்கு அவ்வளவு பயம். அடக்க பூசை நடக்கும் பொழுதெல்லாம் கோவில் கணக்கப்பிள்ளை( கோவிலில் பாதிரியாருக்கு உதவும் வேலையில் இருப்பவர்) வீடு தேடி வந்து என்னை சாமியாருக்கு உதவ அழைத்துச் செல்வார்.
எனக்கு கோவில் கணக்கப்பிள்ளை மீது கடும் பிரியம். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே என்னை கோவிலில் பைபிள் வாசிக்க ஏற்பாடு செய்தவர் அவர். பைபிள் ஸ்டாண்டை விட உயரம் குறைவாக இருப்பேன் என்பதால் கீழே ஒரு எக்ஸ்ட்ரா பலகை அடித்து என்னை பைபிள் வாசிக்க வைத்தவர் அவர் . பசங்களுக்கு அவரைக்கண்டால் ஒரு பயம். கோவிலில் ஜெபம் நடக்கும்போது பேசிக்கொண்டிருக்கும் வெடிப்பசங்களை அவர் பின்னால் பூனை மாதிரி முதுகில் அடிக்கும்போது கோவிலே திரும்பி பார்க்கும். சிலவேளைகளில் பிரசங்கம் வைத்துக்கொண்டிருக்கும் பாதிரியாரே அடிச்சத்தத்தை கேட்டு பிரசங்கத்தை நிறுத்தி விடுவார்.
ஒருமுறை கீழத்தெருவில் ஒருவர் இறந்துவிடவே வழக்கம்போல அடக்க பூசைக்கு பாதிரியாருக்கு உதவி செய்ய பசங்க யாரும் கிடைக்கவில்லை. அதுவும் இளம்வயது பெண் மரணமடைந்திருந்தார். கோவில் கணக்கப்பிள்ளை இறுதி சடங்கு பூஜைக்கு உதவி செய்ய என்னை தேடி வருவார் என்று எனக்குத்தெரியும். எனவே நான் வீட்டில் சமையறையில் ஒளிந்து கொண்டிருந்தேன். அன்று என் துரதிர்ஷ்டம் அவர் பின்கொல்லை கதவை வந்து தட்டியது தான். நானும் வசமாக மாட்டிக்கொண்டேன்.
கோவில் பூஜைக்கு முன்னர் கீழத்தெருவில் உள்ள இறந்தவர் வீட்டிற்கு பிரேதத்தை எடுக்க பாதிரியாருடன் பூசை உதவி உடுப்புப்போட்டுக்கொண்டு சென்றேன். வீட்டின் முன்னர் ஒரு தட்டிப்பந்தலில் சடலத்தை வைத்திருந்தார்கள். நான் கையில் சிலுவையுடன் அடக்கப்பெட்டி முன்னர் நின்று கொண்டிருந்தேன். பாதிரியார் செபம் சொல்லி மந்திரித்து விட்டு கிளம்பினார்.
உரிமைப்பட்ட சொந்தக்காரர்கள் எல்லாம் சவப்பெட்டியை ஆளுக்கு ஒரு மூலையிலிருந்து தூக்க அழுதுகொண்டிருந்த பெண்கள் எல்லாம் இப்போது உரக்க சப்தமிட்டு பெட்டியை தூக்க விடாமல் தடுக்க ஏற்கெனவே வலுக்கட்டாயமாக பாதிரியாருக்கு உதவிக்கு கொண்டுவரப்பட்ட நான் அடக்க பெட்டி முன்னர் மாட்டிக்கொண்டேன். பெண்களின் ஒப்பாரியில் நானும் சத்தம் போட்டு அழுதுவிட அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குடிமகன் பீரிஸ் என்னை அந்த அழும் கூட்டத்திலிருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.
அன்று முதல் எனக்கு பீரிஸ்பிள்ளை மீது சிறிது பாசம் ஆரம்பித்தது. அதன் பின்னர் அவரை எங்கு கண்டாலும் நலம் விசாரிப்பேன். நான் பம்பாய் செல்லுவதாக அவரிடம் சொன்னபோது அங்கு ஒரு நல்ல கத்தரிகோல் வாங்கி கொடுத்து விடு என்றார். ஆனால் நான் அதை அவருக்கு வாங்கிக்கொடுப்பதற்கு முன்னர் அவர் திடீரென இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது.
குமடிமகன் பீரிஸ் நன்றாக குடிப்பார். ஆனால் காரியத்தில் சரியாக இருப்பார். பலர் பீரிஸ் பிள்ளையிடம் ஓசிக்குத்தான் முடி வெட்டுவார்கள். வருடத்திற்கு அவருக்கு ஏதேனும் கொடுப்பதை பெரிதாக காட்டுவார்கள். கடற்கரையில் அவர் முடிவெட்டும் குடும்பத்தினர்களின் கட்டுமரம் வரும் போது ஒரு பிடி மீன் எடுப்பார். அந்த மீனையும் ஏச்சிக்கும் பேச்சி்ற்கும் இடையில் தான் அவர் எடுக்க வேண்டும். தோட்டம் வைத்திருப்பவர்கள் அறுவடை வரும்போது ஏதேனும் கொடுப்பார்கள். அந்த வீடுகளிலிருந்து குடிமகன் மனைவி வாழைக்குலைகளையும், தேங்காய்களையும் உரிமையுடன் எடுத்துச் செல்லுவார்.
பீரீஸ்பிள்ளை தனது கடைசிகாலத்தில் தன் பிள்ளைகள் பற்றி அதிகம் கவலைப்பட்டார். தனது வேலையை தன் பிள்ளைகள் யாரும் செய்ய வருவதில்லை என்பது அவர் வருத்தம்.
பீரிஸ்பிள்ளை மகன்கள் எல்லோரும் கடலுக்கு மீன்பிடிக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தனர். அவர் இறந்த பிறகு அவர்களில் ஒரு பிள்ளையை வலுக்கட்டாயமாக குடிமகன் தொழிலுக்கு கொண்டு வந்ததாக கேள்விப்பட்டேன். எனினும் அந்த பையன் தன் பரம்பரை தொழிலை ஒழுங்காகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. மற்ற பிள்ளைகள் யாரும் அந்த தொழிலுக்கு வரவில்லை.
யாரும் இறந்து விட்டால் ஊர் ஊராக போய் துக்சச்செய்தியை உறவினர்களுக்கு சொல்லுவது, ஊர் கமிட்டி எடுக்கும் முடிவை பொதுமக்களுக்கு கொட்டு அடித்துச்சொல்லுவது எல்லாம் இந்த குடிமக்களின் வேலை தான். கொட்டு அடித்துக்கொண்டு வருபவர் நாளைக்கு ஊர்க்கூட்டம் என்பதை நாளைகழித்து கூட்டம் என்று சொல்லி முடிப்பார். ஊருக்குள் கொட்டு அடித்துக்கொண்டு குடிமகன் வரும்போது பெரிசு முதல் சிறியவர்கள் வரை என்ன செய்தி என்ன செய்தி என்று கேட்டு அவர் சொல்ல வந்த செய்தியை இவர்களே மாற்றி விடுவார்கள்.
இப்போது எங்கள் ஊர் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இந்த குடிமகன்களை தான் ஊர்க்காரர்கள் மாறவிடுவதே இல்லை. இதற்கு பயந்து பலர் தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு சென்று விட்டனர். மற்றும் பலர் பக்கத்து ஊர்களுக்குப் போய் மீன்பிடி தொழிலை செய்கிறார்கள். அடுத்த ஊரிலாவது இவர்கள் நாவிதன் பட்டம் இல்லாமல் வாழுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
ஊரில் அடிமைகள் போய் வேலை செய்யும் இவர்களுக்கு குடிமகன்கள் என்று எங்கள் ஊரில் எப்படி அழைக்கிறார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. காட்டுமிராண்டித்தனமாக அடித்தேன், பிடித்தேன் என்று செயல்படும் எங்கள் ஊர்களில் இவர்களால் எப்படி இவ்வளவு பயபக்தியாக செயல்பட முடிகிறது என்பது அதை விட எப்போதும் ஆச்சரியம் தரும் விசயம்.
புனித சவேரியார் காலத்தில் ( சுமார் 450 வருடங்களுக்கு முன்னர் )தங்களுக்கு ரொம்ப மரியாதை இருந்தது என்று பீரிஸ்பிள்ளை என் அப்பாவிடம் பெருமை பொங்க சொல்லுவதை கேட்டிருக்கிறேன். இப்போது குடிமக்களை யாரும் முடிவெட்ட தேடுவதில்லை. இழவு வீட்டில் மட்டும் இப்போது இவர்களுக்கு சிறிது கிராக்கி. அதுவும் அங்கு விரைவில் அண்டர்டேக்கர்கள் வந்து விடலாம்.
ஒரு சமூகத்தில் எல்லோரும் முன்னேற வேண்டும். ஆனால் அது நடக்கும் போது ஒரு நெரூடல் ஏற்படுவதும் இயற்க்கை தான். தமிழில் நாவிதன் என்றால் பக்கத்தில் இருப்பவன் என்று பொருள். மலையாளத்தில் கூட இவர்களை அடுத்தோன் என்று அழைக்கிறார்கள். எங்கள் ஊர்களில் இன்னும் ஒரு படி மேலே போய் குடிமகன் என்று அழைப்பதும் ஒரு கலாச்சாரத்தின் எச்சமோ என்னவோ